தேவாரத் திருப்பதிகங்கள்

பஞ்ச புராணம்

பொன்னார் மேனியனே புலித்தோலையரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

பால்நினைந் தூட்டும் தாயினுஞ் சாலப்

பரிந்து நீ பாவியேனுடைய

ஊனினையுருக்கி உள்ளொளி பெருக்கி

உலப்பிலா ஆனந்தமாய

தேனினைச் சொரிந்து புறம் புறந் திரிந்த

செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்

எங்கெழுந் தருளுவது நீயே.

ஓளிவளர் விளக்கே யுலப்பிலா வொன்றே

உணர்வுசூள் கடந்ததோருணர்வே

தெளிவளர் பளிங்கின் திரண் மணிக்குன்றே

சித்தத்துட் தித்திக்கும் தேனே

அளிவளருள்ளத் தானந்தக் கனியே

அம்பல மாடரங் காக

தெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்

தொண்டனேன் விளம்புமா விளம்பே.

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணைபோற்றி

ஏவருந் துதிக்க நின்ற ஈராறுதோள் போற்றி காஞ்சி

மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி அன்னான்

சேவலும் மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

ஏறுமயிலேறி விளையாடுமுகம் ஒன்றே

ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே

கூறுமடியார்கள் வினை தீர்க்குமுக மொன்றே

குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

மாறுபடு சூரரை வதைத்தமுக மொன்றே

வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே

ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்

ஆதியருணாசலம் அமர்ந்த பெருமாளே.