அப்பர் திருநாவுக்கரசு நாயனார் ஏழாம் நூற்றாண்டு தொடக்கத்தில், தமிழ் நாட்டில் பக்தி இயக்கத்தை வளர்த்த சிவனடியார்களுள் ஒருவரும், சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும் ஆவார்.
என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட் டென்னையோர் உருவ மாக்கி
இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் டென்னுள்ளங் கோயி லாக்கி
அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண் டருள்செய்த ஆரூ ரர்தம்
முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் காக்கைப்பின் போன வாறே.
அங்கத்தை மண்ணுக் காக்கி யார்வத்தை யுனக்கே தந்து
பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைச்
சங்கொத்த மேனிச் செல்வா சாதனா ணாயே னுன்னை
எங்குற்றா யென்ற போதா விங்குற்றே னென்கண் டாயே.
கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்
உருவாய்த் தெரிந்துன்ற னாமம் பயின்றே னுனதருளால்
திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூரரனே.
கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு
உருகிற்றெ னுள்ளமும் நானுங் கிடந்தலந் தெய்த்தொழிந்தேன்
திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா
ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.
நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாணிலீர்
சுடலை சேர்வது சொல் பிரமாணமே
கடலின் நஞ்சு அமுது உண்டவன் கைவிட்டால்
உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே.
கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை
கருநரம்பும் வெள்ளெலும்புஞ் சேர்ந்தொன் றாகி
உருவாகிப் புறப்பட்டிங் கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட் டுயிராருங் கடைபோ காரால்
மருவாகி நின்னடியே மறவே னம்மான்
மறித்தொருகாற் பிறப்புண்டேல் மறவா வண்ணம்
திருவாரூர் மணவாளா திருத்தெங் கூராய்
செம்பொனே கம்பனே திகைத்திட் டேனே.
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினாற் றொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்
அத்தாவுன் பொற்பாத மடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
தந்தையார் தாயா ருடன்பி றந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தா மாரே
வந்தவா றெங்ஙனே போமா றேதோ
மாயமா மிதற்கேதும் மகிழ வேண்டா
சிந்தையீ ருமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சி வாய
என்றெழுவார்க் கிருவிசும்பி லிருக்க லாமே.
எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணி னல்லால்
கண்ணிலேன் மற்றோர் களைகண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய்
ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன்
புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன்
பூம்புகலூர் மேவிய புண்ணி யனே.