சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களைச் சுந்தரர் தேவாரம் என்று அழைக்கின்றனர். இப்பாடல்களைத் திருப்பாட்டு என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களைப் பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.
பரிந்த சுற்றமும் மற்றுவன் றுணையும்
பலருங் கண்டழு தெழவுயிர் உடலைப்
பிரிந்து போமிது நிச்சயம் அறிந்தாற்
பேதை வாழ்வெனும் பிணக்கினைத் தவிர்ந்து
கருந்த டங்கண்ணி பங்கனை உயிரைக்
கால காலனைக் கடவுளை விரும்பிச்
செருந்தி பொன்மலர் திருத்தினை நகருட்
சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்
தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்
கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.
மணமென மகிழ்வார் முன்னே மக்கள்தாய் தந்தை சுற்றம்
பிணமெனச் சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடைச் சோலை தோறும் பைம்பொழில் விளாகத் தெங்கள்
அணைவிணைக் கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சி னேனே.
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழு நாளுந்
தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கி லிடும்போது தடுத்தாட் கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரிய பாம்பும்
பிடித்தாடிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர் போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும்நா நமச்சி வாயவே.