யாத்திரைப்பத்து

சிவலோகத்துக்குச் செல்ல அனைவரையும் அழைத்துக் கூறிய பகுதியாதலின் இது'யாத்திரைப்பத்து' எனப்பட்டது.

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப்

பெருமான் சிறியோமை

ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும்

வெள்ளக் கருணையினால்

ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட்

டீர்வந் தொருப்படுமின்

போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட்

டுடையான் கழல்புகவே.

புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப்

பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா

போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து நாயே

அனைய நமையாண்ட

தகவே யுடையான் தனைச்சாரத் தளரா

திருப்பார் தாந்தாமே.

தாமே தமக்குச் சுற்றமும் தாமே

தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்ன

மாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன்

குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன்

ஆள்வான் பொன்னடிக்கே.

அடியார் ஆனீர் எல்லீரும் அகல

விடுமின் விளையாட்டைக்

கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண்

டிருமின் திருக்குறிப்பைச்

செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ

கத்தே நமைவைப்பான்

பொடிசேர் மேனிப் புயங்கன்தன்

பூவார் கழற்கே புகவிடுமே.

விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர்

காலம் இனியில்லை

உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ

வதற்கே ஒருப் படுமின்

அடைவோம் நாம்போய்ச் சிவபுரத் துள் அணியார்

கதவ தடையாமே

புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன்

ஆள்வான் புகழ்களையே.

புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன்

தாளே புந்திவைத்திட்டு

இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர்

இடையூ றடையாமே

திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று

சிவன்தாள் வணங்கிநாம்

நிகழும் அடியார் முன்சென்று

உருகி நிற்போமே.

நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம்

இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன்

ஆள்வான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும்

பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்

கரியன் பெருமானே.

பெருமான் பேரானந்தத்துப் பிரியா

திருக்கப் பெற்றீர்காள்

அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா

அழுங்கி அரற்றாதே

திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த

போதே சிவபுரத்துத்

திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள்

சென்று சேர்வோமே.

சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த

வைத்துச் சிந்திமின்

போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன்

புயங்கன் அருளமுதம்

ஆரப் பருகி ஆராத ஆர்வங்

கூர அழுந்துவீர்

போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற்

கிடந்து புரளாதே.

புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே

வந்தா ளாகாதீர்

மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட்

கலங்கி மயங்குவீர்

தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ

கக்கோன் திருப்புயங்கன்

அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ

அந்தோ அந்தோவே.