மாணிக்கவாசக சுவாமிகள் திருவாசகம்

மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராவர். முன்னைய மூவரும் தேவாரம் பாடியிருக்க இவர் பாடிய நூல்களாவன திருவாசகமும் திருக்கோவையாருமாகும்.

தனியனேன் பெரும்பிறவிப் பௌவத் தெவ்வத்

தடந்திரையால் எற்றுண்டு பற்றொன் றின்றிக்

கனியைநேர் துவர்வாயார் என்னுங் காலாற்

கலக்குண்டு காமவான் சுறவின் வாய்ப்பட்

டினியென்னே உய்யுமா றென்றென் றெண்ணி

அஞ்செழுத்தின் புணைபிடித்துக் கிடக்கின் றேனை

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லற்

கரைகாட்டி ஆட்கொண்டாய் மூர்க்க னேற்கே.

போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்

போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை

போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்

போற்றிஓம் நமச்சி வாய சயசய போற்றி போற்றி

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய்

அந்தரமே திரிந்துபோய் அருநரகில் வீழ்வேற்குச்

சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட

அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே.

பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும்

பொழுகிய பொய்க்கூரை

இத்தை மெய்யெனக் கருதிநின் றிடர்க்கடற்

சுழித்தலைப் படுவேனை

முத்து மாமணி மாணிக்க வயிரத்த

பவளத்தின் முழுச்சோதி

அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய

அதியங் கண்டாமே.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்

சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்

ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே

ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே.